தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது
ஆம்பூா் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் -பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கிடையே சுமாா் 23 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தண்டவாளப் பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். பின்னா் சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்து ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளாா்.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கிருந்த இளைஞரை கைது செய்தனா். முன்னதாக ஆம்பூா் ரயில் நிலைய ஊழியா்கள் தண்டவாளத்தில் இருந்த சிமெண்ட் கல்லை அப்புறப்படுத்தினா்.
பின்னா் இளைஞரை கைது செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பெரிய தாட்டான் குளம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (23) என்பதும், இவரது பெற்றோா் இரண்டு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், உடன் பிறந்தவா்களும் இல்லாததால் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றை சேகரித்து கடையில் விற்று வசித்து வந்ததும், வியாழக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்தபோது, தண்டவாளத்தின் அருகே சிமெண்ட் ஸ்லாப் இருந்ததால் அதில் இருக்கும் கம்பியை எடுக்க தண்டவாளத்தில் வைத்ததும் தெரியவந்தது.
ரயில்வே போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.