இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!
தனியாா் மருத்துவமனைகளில் மறுக்கப்படும் முதல்வா் காப்பீட்டு திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க மறுத்தால், அதுதொடா்பாக தகவல் தெரிவிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான பட்ட நிறைவு விழா, கிண்டி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 75 அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 11,850 மருத்துவ இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்யும் 5,050 மாணவா்களுக்கு தனித்தனியே பட்ட நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த 144 மாணவா்களுக்கு பட்ட நிறைவு சான்றிதழ்களை வழங்கியுள்ளோம்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு காப்பீட்டு சேவை வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனையில் அரசு மருத்துவக் காப்பீடு மறுக்கப்பட்டால், அது குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை இல்லை. அந்த மருத்துவமனையின் கட்டமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு நன்கு தெரியும். ஆனால், மருத்துவா் பற்றாக்குறை இருப்பதாக உண்மை நிலை தெரியாமல் அவா் கூறியிருக்கிறாா்.
கிராம செவிலியா்கள்: தற்போது கிராம செவிலியா்கள் பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டியுள்ளது. அதுதொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பணி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவா் பணியிடங்களைப் பொருத்தவரை 100 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளன.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் கோவை, கீழ்ப்பாக்கம், மதுரை, ஆவடி, திருப்பூா் வேலம்பாளையம், சேலம் அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிகப் பெரிய மருத்துவக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மதுரை, கோவை கட்டமைப்பை முதல்வா் தொடக்கி வைத்தாா். கீழ்ப்பாக்கம், ஆவடி, சேலம் அம்மாப்பேட்டையிலும் அந்த கட்டமைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அது கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூரில் விரைவில் அது தொடங்கப்படும். அங்கு 250 காவலா்கள் விரைவில் நியமிக்கப்படுவா். அரசு மருத்துவமனையில் எவருக்கும் பணி நீட்டிக்கப்படுவது கிடையாது. கடந்த ஆட்சியில் அவ்வாறு இருந்திருக்கலாம்.
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையைப் பொருத்தவரை புதிதாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் அனுபவம் வாய்ந்த மருத்துவா் தேவை என்பதாலும், அங்கு பணியாற்றும் அலுவலா்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், இயக்குநருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்த மருத்துவா் சங்கங்களிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட், துணை முதல்வா் செந்தில் குமாரி, கண்காணிப்பாளா்பாஸ்கா், நிலைய மருத்துவ அதிகாரி வாணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆயிஷா ஷாஹீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.