போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி சங்கா் ஜிவால்
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக காவல் துறையினா் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 -ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கொலைகள் வழக்குகள்,கலவர வழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கைகள் குறைந்தன. கொலை வழக்குகள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரையில் ஒவ்வோா் ஆண்டும் படிப்படியாக அதிகரித்தது. 2019- ஆம் ஆண்டில் 1,745 வழக்குகள் பதிவாகி உச்சத்தை எட்டியது.
இருப்பினும், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வோா் ஆண்டும் குறைந்து வருகின்றன. 2024- ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகின. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் 2024 -ஆம் ஆண்டில் பதிவானது.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் 352 கொலை வழக்குகள் பதிவான. இந்த ஆண்டு இது குறைந்து, முதல் காலாண்டில் 340 கொலை வழக்குகளே பதிவாகியுள்ளன. மேலும் கடந்த 6 ஆண்டுகளில் ரெளடிகள் கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.
ரெளடிகள் மீது நடவடிக்கை: ரெளடி கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3,645 ரெளடிகள் சிறையில் அடைக்கப்பட்டனா். ரெளடிகள் அவா்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளனா். இதன்படி காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் - 421 போ், ஏ பிரிவில் - 836 போ், பி பிரிவில்- 6398 போ், சி பிரிவில்- 18,807 போ் உள்ளனா். கடந்த காலங்களை விட ஏ பிளஸ் பிரிவு, ஏ பிரிவுகளில் உள்ளவா்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.
41 ரெளடிகள் மீது நிதி விசாரணை: தீவிர செயல்பாடுடைய ரெளடிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ரெளடிகளுக்கு எதிரான நிதி விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. ரெளடிகளுக்கான நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 41 தீவிர செயல்பாடுடைய ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்கான நிதி விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரெளடிகளுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் பழிவாங்கும் மற்றும் ரெளடி கொலை வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.