தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி
தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ”கலைஞர் கலையரங்கத்தை” துணை முதல்வர் உதயநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் நிக்ழச்சியில் பேசுகையில், தமிழ்நாடு என்பதற்கு அடிப்படையே தமிழ் தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை கொண்டு வருகின்றார்கள், நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், இந்தித் திணிப்பு கொண்டு வருகின்றார்கள், புதிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயர்களில் இதெல்லாம் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழ்நாட்டில் ஹிந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பது தான்.
இதற்கான வாதங்களை நிறைய பேர் சொல்வார்கள். உண்மையைப் போலவே சிலர் பேசுவார்கள். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உண்மைய புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம், 1965-இல் ஏற்பட்ட மாணவர்களுடைய எழுச்சி தான் முக்கிய காரணம்.
அந்த மாணவர்கள் போராட்டம் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது. உங்களுடைய சீனியர்கள் நடத்திய போராட்டம் தான் தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை காத்து நாம் எல்லோரையும் பாதுகாத்தது.
இன்றைக்கு உங்களுக்கு முன் போராடிய அந்த சீனியர்களுக்கு எல்லாம் இப்போது, 70, 80 வயது ஆகியிருக்கும். அவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்கள்.
இன்றைக்கு அவர்களிடம் போய் கேட்டீர்கள் என்றால், உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரே பரிசு என்ன தெரியுமா? “எங்களுடைய காலத்திலும் நாங்களும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதில் என்றென்றும் உறுதியாக இருப்போம்” நீங்கள் உங்களுடைய சீனியர்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்
பொதுவாக, பெரியாராக இருந்தாலும், அண்ணா, கலைஞராக இருந்தாலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள். காரணம், மாணவர்கள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் அவர்களுடைய படிப்பு பாதித்துவிடும் என்ற எண்ணம்தான். ஆனால் இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் நீட் தேர்வு, முமமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்று பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவர்கள் நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இதனை சரியாக புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றார்.