தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (விருச்சிகம்)
தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி - பஞசம ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்
நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராகி அன்பர்களே!
இந்த வருடம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும்.
வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். திருமணவானவர்களுக்கு புத்திர பாக்கிய அனுகூலம் உண்டு. கடன் வழக்கு எதிரி ஆகிய வகைகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் சமரச பேச்சுகளால் சுமூக நிலைக்கு வரும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆலோசனைகள் வழங்கி குடும்பத்தை நல்ல முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவர். தந்தை வழி உறவினர்கள் அளவான முறையில் உறவு வைத்துக் கொள்வார்கள். செய்தொழிலில் முன்னேற்றமும் ஆதாயமும் கணகூடாக கிடைக்கும்.
ஞானம் நிறைந்தவர்கள் உங்கள் வீடு தேடி வந்து உங்களுக்கு ஆசி வழங்குவார்கள். வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்வதால் காரியம் கைகூடும்.
உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்புற்ற செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். தேயிலை ஏலக்காய் எஸ்டேட் காப்பித்தோட்டம் ஆகிய இடங்களில் பணிசெய்பவர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும் ஊதிய உயர்வும் பல்வேறு சலுகைகளும் பெறுவார்கள்.
அரசு சுற்றுலா துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயனிகளுக்கு தேவையான வசதிகளை செய்துபொடுத்து பொருளாதார நிலை உயரப்பெறுவர். தாயின் அன்பும் தந்தையின் ஆதரவும் நல்ல முறையில் கிடைக்கும்.
புதிய சொத்துக்கள் வாங்கவும் புத்திரர்களால் மேன்மையும் உண்டாகும். தொழில் நிலைகள் மேன்மைதரும்.
தொழிலதிபர்கள்: கண் ஆஸ்பத்திரி நடத்துபவர்கள் புதியவர்களை பங்குதாரர்களாக சோத்துச் கொண்டு சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். ஆடுகள் மற்றும் மிருகங்களின் தோல்களால் ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் உள்ளவர்கள் நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். விக் மற்றும் சவுரிமுடி உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். புதிய வீடு வாகனம் வாங்குவதும் பூர்வ புண்ணிய பலன்களைப் பெறுவதிலும் நல்ல நிலைகள் உண்டாகும். பொதுவாக அனைத்து தொழிலதிபர்களும் நல்ல நிலைக்கு வருவர்.
வியாபாரிகள்: தேயிலை காப்பி மிளகு ஏலக்காய் ஆயியவற்றை கொள்முதல் செய்து வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். கம்பளி ஆடைகள் மற்றும் தோல்பொருட்கள் வாங்கி விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலை அதிக ஆர்வத்துடன் நடத்தி பொருளாதார உயர்வு பெறுவார்கள். அழகு நிலையம் நடத்துபவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று பலன் பெறுவார்கள். தகுந்த பொருளாதார சேமிப்பும் சமூகப்பணி பணியாற்றுவதில் அக்கறையும் வாகன வகைகளில் அனுகூலமான பலன்களும் நடக்கும். போக்குவரத்துகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பிரயாணங்களால் நன்மைகள் உண்டாகும்.
மாணவர்கள்: கணிணி, சட்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் சமையற்கலை சம்பந்தப்பட்ட படிப்பினில் உள்ள மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அடுத்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும்.
பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும். வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும். தோழிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மன ஆறுதலைத் தரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் முன்பகை உண்ளவர்களிடம் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கணவனின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வாகனங்களை இயக்கும் பெண்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாகப் பின்பற்றவும். சுயதொழில் செய்யும் பெண்கள் நல்ல தொழில் வாய்ப்புகளைப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள்.
கலைத்துறையினர்:
இசை அமைப்பாளர்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது அலைச்சலும் அதன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரலாம்.
அரசியல்வாதிகள்:
அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள்.
விசாகம் 4
இந்த ஆண்டு வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அனுஷம்
இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை
இந்த ஆண்டு பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
பரிகாரம்
ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை இலைகளை அர்ப்பணிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் கார்த்திகேயாய நம:”.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9