``திக்வேஷ் செய்தால் அபராதம், Kohli செய்தால் நியாயமா? BCCI இரட்டை வேடம்..'' - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் ஸ்பின்னரான திக்வேஷ் ரதி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, இதுவரை 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். விக்கெட் எண்ணிக்கைப் பெரிதாக இல்லையென்றாலும், இவரின் எக்கனாமி 7.2 மட்டுமே. அதேசமயம் இதற்கு நேர்மாறாக போட்டி நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ-யால் அபராதத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.

முதலில் பஞ்சாபுக்கெதிரான ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவை விக்கெட் எடுத்த பிறகு நோட்புக் செலிபிரேஷன் (கைகளில் வெறுமனே பெயர் எழுதுவது போல செய்தல்) செய்ததால், ஒரு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து, மும்பைக்கெதிரான ஆட்டத்தில் நமன் திர் விக்கெட்டை எடுத்தபோது நோட்புக் செலிபிரேஷன் செய்ததால் இரண்டு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கொல்கத்தாவுக்கெதிரான ஆட்டத்தில் சுனில் நரைன் விக்கெட்டை எடுத்த பிறகு மீண்டும் நோட்புக் செலிபிரேஷனில் ஈடுபட்டார். ஆனால், இம்முறை தரையில் நோட்புக் செலிபிரேஷன் செய்தார். அதனால், பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறிருக்க, கடந்த ஞாயிற்றுக் கிழமை பஞ்சாபுக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றிபெற்ற பிறகு ஸ்ரேயஸ் ஐயரைப் பார்த்து வின்னிங் செலிபிரேஷன் செய்த விதம் பேசுபொருளானது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, திக்வேஷ் ரதிக்கு ஒரு விதமாகவும், கோலிக்கு ஒருவிதமாகவும் என பிசிசிஐ இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்திருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "திக்வேஷ் ரதி நோட்புக் செலிபிரேஷன் செய்ததை பார்த்தேன். இரண்டு முறை அபராதத்துக்குள்ளானார். மூன்றாவது முறை, அபராதத்தில் இழக்குமளவுக்குச் சம்பாதிக்கவில்லை என்று பயந்து, தரையில் நோட்புக் செலிபிரேஷன் செய்தார். அதன்பிறகு, பஞ்சாப் vs பெங்களூரு போட்டி முடிந்ததும் கோலியின் செலிப்ரேஷனைப் பார்த்தோம். இதுவும் ஆக்ரோஷம்தான். ஆனால், கோலியிடம் இதைப் பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசவில்லை. இதில், கோலியை யாருமே இழுக்கவில்லை. ஆனால், திக்வேஷ் ரதி நோட்புக் செலிபிரேஷன் செய்தபோது மட்டும் நீங்கள் அதைச் செய்தீர்கள்" என்று கூறினார்.
இதில் பிசிசிஐ-யின் செயல் குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
