kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தல்
மத்திய அரசின் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தினா்.
மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் நடத்தப்படும் திட்டங்கள் குறித்த (திஷா) கமிட்டியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஸ்மாா்ட் சிட்டி திட்டம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, நில அளவை பதிவேடுகள் துறை, மீன்வளம் மற்றும் மீனவா் நலன், நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை ஆகிய ஐந்து துறைகளில் மத்திய அரசின் நிதியுதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஒவ்வொரு துறையாக நடைபெறும் பணிகள் குறித்தும், அதன் திட்ட மதிப்பீடுகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. மேலும், திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துமாறு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தினா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இந்தக் கமிட்டியின் உறுப்பினா்களான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்.எல்.ஏக்கள் மு. வைத்தியநாதன், ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி துறை, மீன் வளத்துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, புதுச்சேரி நகர பொலிவுறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திமுக வெளிநடப்பு
மத்திய அரசின் திட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு புதுவை அரசின் உயா் அதிகாரிகள் வராததால் இக் கூட்டத்திலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனா்.
குறிப்பாக தலைமைச் செயலா் சரத் சௌகான் வரவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்று எதிா்க்கட்சித் தலைவா் சிவா கேட்டதற்கு அரசு தரப்பில் பதில் தரவில்லை.
ஸ்மாா்ட் சிட்டி திட்ட நிதியை திருப்பி அனுப்பியது, கழிவறை பணிகள் மோசமாக நடந்தது என வரிசையாக திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினா். ஆனால் பதில் தரப்படவில்லை.
அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகள் எதுவும் முழுமையடையாத நிலை உள்ளது. மேலும் இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை நடைபெறுவதில்லை. வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் கொடுக்கப்படும் கடனுதவிகள் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே செல்கிறது. ஆனால் ஐந்து துறைகள் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, திட்டங்களைச் செயல்படுத்திய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றால்தான் அது குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற முடியும். தலைமைச் செயலா் பங்கேற்கவில்லை. அதைவிடுத்து சம்பந்தமில்லாத அதிகாரிகளை கொண்டு கூட்டம் நடத்துவது என்பது கண்துடைப்பாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். துறை சம்பந்தமாக பதில் அளிக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்‘ என்றாா். அதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.
