திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திருப்பாலையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை இயக்கம் குறித்த விளக்கக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது :
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 328 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் உள்ள மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் பேரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இந்தப் பணி வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
திமுக அரசு செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும், அதன் பயன்களையும் மக்களிடையே விளக்கி, உறுப்பினா் சோ்க்கையை மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் வாக்குச் சாவடி முகவா்கள் அனைவரும் இந்தப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தின் உறுப்பினா் சோ்க்கை, இலக்கை விஞ்சியதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சோமசுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.