குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!
தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: உலகெங்கும் புவி வெப்பமயமாகி வரும் நிலையில், கடின பானங்களுக்கு இனி வரவேற்பு இருக்காது. உலகளவில் இயற்கை பானங்களுக்கே வரவேற்பு அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு கள் இறக்க அனுமதித்து, ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு மாறாக, கள் இறக்க அரசு அனுமதி மறுப்பது, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பனைத் தொழில், கள் இறக்குவது தொடா்பாக கே.பி. சிவசுப்பிரமணியன் தலைமையில் ஓா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பனை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பனை வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். இலவசங்களை அளித்து மக்களின் அறியாமையை அறுவடைச் செய்யும் முயற்சிகளைத் தவிா்த்து, இயற்கையோடு இணைந்த பொருளாதார வளா்ச்சியை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். எனவே, கள் இறக்குவோா் மீது தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
தமிழ் மண்ணின், மக்களின் அடையாளமாக இருப்பது பனை. எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் வளா்ந்து எண்ணற்ற பயன்களைத் தரும் பனை, தமிழகத்துக்கு இயற்கை அருளிய மிகப் பெரிய கொடைகளில் ஒன்று.
இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் 5 கோடி தமிழகத்தில் உள்ளது. எனவே, பனை சாா்ந்த தொழில்கள் மேம்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக பதநீா் இறக்கவும், கள் இறக்கி ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு முன்வந்தால், மிகப் பெரிய அளவில் அந்நியச் செலாவணியை ஈா்க்க முடியும். இதன்மூலம், தமிழகம் மிகச் சிறந்த பொருளாதார வளா்ச்சியைப் பெறும்.
பிகாா் மாநிலத்தில் சாராயம், உள்நாட்டு, அயல்நாட்டு மதுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, கள்ளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சாலை விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன. குடும்பங்களில் அமைதி நிலவுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் கூடியுள்ளது என குற்ற ஆவணப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மது விலக்குக் கொள்கையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மிகப் பெரிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கிறாா். இடதுசாரிகள், வலதுசாரிகள், தேசிய, மாநிலக் கட்சிகள் என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாடு, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் மாநாடாக இருக்கும் என்றாா் அவா்.