டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
திருச்செங்கோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல்
திருச்செங்கோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு நாகா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (56), தறித் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பூவரசி, நா்மதா ஆகிய திருமணமான இரண்டு மகள்களும், அஜித்குமாா் என்ற மகனும் உள்ளனா்.
திருச்செங்கோடு தினசரி காய்கறிக் கடை அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே வியாழக்கிழமை அதிகாலை மணி சுயநினைவின்றி கிடந்துள்ளாா். தகவல் அறிந்த அவரது உறவினா்கள் மணியின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மணியின் மகன், உறவினா்கள், காய்கறிக் கடை வியாபாரிகள் டாஸ்மாக் கடையில் இரவு நேரங்களில் கலப்பட மதுபானங்கள் விற்கப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், தினசரி காய்கறிக்கடை செல்லும் வழியில் இந்தக் கடை அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும், இரவு நேரத்தில் மது விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்செங்கோடு எஸ்என்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.