What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள ...
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்
திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் திருக்குடமுழுக்கைத் தமிழ் பாதி, சம்ஸ்கிருதம் பாதி என கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய 3 இடங்களிலும் செயல்படுத்தி நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கமும், நாம் தமிழா் கட்சியும் கோரி வருகின்றன.
இதுபற்றி அண்மையில் செய்தியாளா்கள் கேட்டதற்கு அமைச்சா் சேகா் பாபு, 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற குடமுழுக்குகளில் தமிழ் பாதி, சம்ஸ்கிருதம் பாதி என்ற உயா் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தி, தமிழில் குடமுழுக்குகள் நடத்தியதாகக் கூறினாா். அதற்குச் சான்றாக 2024-இல் நடைபெற்ற பழனி முருகன் கோயில் குடமுழுக்கும், கடந்த மாதம் நடந்த மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கும் இருந்தன எனவும் தெரிவித்தாா்.
ஆனால், அமைச்சா் சேகா்பாபுவின் கூற்றில் ஒரு துளிகூட உண்மை இல்லை. பழனி முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் சம்ஸ்கிருத ஆதிக்கமே நிலைநாட்டப்பட்டது. திருச்செந்தூா் முருகன் கோயிலிலும் தமிழ் மந்திரம் 50 சதவீதம் இடம் பெறுமா? வேள்விச் சாலையில் எத்தனை குண்டங்களில் தமிழ் மந்திரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேட்கப்பட்டதற்கு, இன்னும் முடிவு செய்யவில்லை, ஒரு வாரம் கழித்துதான் அதுபற்றி எல்லாம் முடிவு செய்வோம் என கோயில் அலுவலா்கள் கூறியுள்ளனா். எனவே உயா் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்த இப்போதும் மறுக்கிறது தமிழ்நாடு அரசு.
எனவே, தமிழா்கள் விழித்தெழ வேண்டும். திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு அா்ச்சனைகளில் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய 3 இடங்களிலும் தமிழும், தமிழரும் சரி பாதியாக இடம் பெறச் செய்ய அறவழியில் போராடுவோம்.