திருப்புமுனையாக அமைந்த திருமலை... மாஸ் ஹீரோவாக விஜய் எடுத்த ரிஸ்க்!
நடிகர் விஜய் தொடக்கத்தில் சாக்லேட் பாயாகதான் நடித்து வந்தார். காதல் படங்கள், குடும்ப படங்கள் என இருந்தவர் முழுக்க முழுக்க ரக்கட் பாயாக (Rugged Boy) மாறியது திருமலை படத்துக்குப் பிறகுதான்.
இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் 2003-இல் இருந்துதான் அவர் தாடியை வளர்க்கத் தொடங்கினார். அது மாஸ் ஹீரோவாக மாறியதற்கான அவரது மனநிலை மாற்றமாக எடுத்துக்கொள்ளலாம்.
திருமலை படத்துக்கு முன்பாக வசீகரா, பகவதி படங்களில் மெல்லியதாக தாடி வைத்திருப்பார். அதிலும் பகவதியில் பாதி படம் வரைக்கும்தான் தாடி வைத்திருப்பார். திருமலை படத்தில்தான் படம் முழுக்க தாடி வைத்திருப்பார். பிறகு, தாடியை எடுத்ததே காவலன் படத்தில்தான். அந்த அளவுக்கு கமர்ஷியல் ஹீரோவாகி விட்டார்.
1992 - 2002: பகவதி
2003: வசீகரா, திருமலை
2003 - 2025: (திருமலைக்குப் பின்) - கில்லி, மதுரை, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ.
மாஸ் ஹீரோவாகிவிட்ட பிறகு உச்ச நட்சத்திரங்கள் புதியதாக எடுக்க ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள். ரஜினி தொடக்கத்தில் எடுத்த முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்கள் எல்லாம் பின்னாட்களில் இல்லாமல் போய்விட்டன.
குறிப்பாக சொல்வதானால், மாஸ் ஹீரோக்கள் சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் எடுப்பதே இல்லை. அது அவர்களது நடிப்பின்மேல் இருக்கும் அவநம்பிக்கையா அல்லது கதையின் மேல் இருக்கும் அவநம்பிக்கையா எனத் தெரியவில்லை!
நடிகர் விஜய் நண்பன் படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லாமல் நடித்து அதை உடைத்திருந்தார். விஜய்-க்கு நிகராக இருக்கும் அஜித், சண்டையே இல்லாத பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டைக் காட்சியை வலிந்து திணித்திருப்பார்கள்.
அடுத்ததாக, விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் முதல் பாதியில் ஒரு சண்டைக் காட்சிக்கூட இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதை சுமாராக இருந்ததால் அந்தப் படத்தில் இருந்த அப்பா- மகன் உறவு போன்ற சில நல்ல விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டோம்.
நகைச்சுவை செய்வது கமர்ஷியல் நடிகருக்கு மிகப்பெரிய பலம். ரஜினி இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் அவரது ஸ்டைலுக்குப் பிறகு நகைச்சுவையும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நடனம் ஆடுதல், நகைச்சுவையாக பேசுதல், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தல் என கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான லட்சணங்கள் விஜய்யிடம் இருக்கின்றன.
திருமலை படத்துக்குப் பிறகு, டாப் கியரில் சென்ற விஜய் மீண்டும் சாக்லேட் பாயாக மாற முடியாமல் சென்றது. அதனால்தான் என்னவோ, காவலன் திரைப்படத்துக்கு அதீத வரவேற்பு கிடைத்தது!
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஃபாத்ரூமில் அழும் காட்சிகள், கத்தி படத்தில் சிறையில் அழும் காட்சிகள் அவரை சிறந்த நடிகன் என்பதற்கான சான்றுகள்!
அறிமுக இயக்குநர்கள், 2-ஆம் பட இயக்குநர்களுக்கு விஜய் அதிகமாக வாய்ப்பளித்துள்ளார். அதில் பல தோல்விப் படங்களும் சில வெற்றிப் படங்களும் கிடைத்திருக்கின்றன.
விஜய் திருமலை படத்தில் எடுத்த முடிவு போலத்தான் நமது வாழ்க்கையிலும் எடுக்கும் சில முடிவுகள் நம்மை எங்கேயோ கூட்டிச் செல்லும்.
விஜய் திருமலையில் எடுத்தது போலவே மீண்டும் சினிமாவை கைவிட்டு அரசியல் என்ற ரிஸ்கை எடுத்திருக்கிறார். அது ஏற்றமாக மாறுமா அல்லது ஏமாற்றமாக மாறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!