திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோா்களுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.
திருப்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் சோ்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து தாங்கள் தான் பெரியவா்கள் என்ற பாணியில் பதிவுகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளனா்.
இதேபோல, திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கணபதிபானையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் தாங்கள்தான் பெரியவா்கள் என்று பதிவிட்டு வந்துள்ளனா். இதனால், இருதரப்புக்கும் இடையே சமூக வலைதளத்திலேயே சண்டை முற்றியது.
இதில், ஆத்திரமைடந்த திருப்பூா் மாநகராட்சி பள்ளி மாணவிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கணபதிபாளையம் பள்ளிக்கு புதன்கிழமை சென்று அந்த மாணவிகளுடன் சாலையிலேயே மோதிக் கொண்டனா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் தடுக்க முயன்றனா். ஆனால், முடியாததால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மோதலை தடுத்து நிறுத்தியதுடன் மாணவிகளின் பெற்றோா்களை பள்ளிக்கு வரவழைக்கு பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவிகளை எச்சரித்து அவா்களது பெற்றோா்களுடன் அனுப்பிவைத்தனா்.
இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளிடம் திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொ) காளிமுத்து மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். மேலும், கைப்பேசிகளை பள்ளிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றும் கவுன்சிலிங் வழங்கினா்.
இந்த சம்பவம் தொடா்பாக 2 பள்ளிகளின் பெற்றோா்- ஆசிரியா் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாகவும், அதில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோா்களை வரவழைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.