இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி என்கவுன்டர்; இருவர் கைது; நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தந்தை மூர்த்தி மற்றும் மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மூர்த்தியை மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து மூர்த்தியின் உறவினர்கள் காவல் உதவி எண்ணான 100-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு, புகாரை விசாரிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்கனூத்து கிராமத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியிடம் விசாரணை நடத்தியுள்ளார். போலீஸ் வருவதை அறிந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டி ஆகிய இருவரிடமும் விசாரணை செய்துவிட்டு, இருவரையும் புகைப்படம் எடுத்துள்ளார் சண்முகவேல். அதன் பின், காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலென்ஸை வரவழைத்துள்ளார் சண்முகவேல். ஆம்புலென்ஸ் வந்து நின்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற மணிகண்டன் கையில் அரிவாளுடன் சண்முகவேலை நோக்கி ஓடி வந்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் தங்களை செல்போனில் போட்டா எடுத்ததால், ஆத்திரமடைந்த மூர்த்தியும், தங்கபாண்டியும் மணிகண்டனுடன் சேர்ந்து சண்முகவேலுவைத் துரத்தி உள்ளனர். நிலைமை கை மீறிப்போவதை அறிந்துகொண்ட சண்முகவேலு, மணிகண்டனிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருந்தபோதிலும், விடாமல் சண்முகவேலுவைத் துரத்திய மூவரும் அவரை விரட்டிச் சென்று கொலை செய்தனர்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூர்த்தி அவரது இளைய மகன் தங்கபாண்டியன் ஆகியோரைக் கைது செய்த நிலையில், முக்கியக் குற்றவாளியான மணிகண்டனைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மணிகண்டன் புதன்கிழமை இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை உப்பாறு ஓடை அருகே ஒளித்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறவே, அவரை போலீசார் வியாழக்கிழமை காலை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் சரவணக்குமாரை மணிகண்டன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சரவணக்குமாருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மணிகண்டன் தப்ப முயன்றதாகவும், அப்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மணிகண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் ஆகிய இருவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்த மணிகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் காயத்துடன் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டனின் தந்தை மூர்த்தி மற்றும் சகோதரர் தங்கபாண்டி ஆகியோரைக் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.