மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்க...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்தர்களின் வசதிக்கேற்ப நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோயில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாள்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2021 ஆம் ஆண்டிற்கு முன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இன்று (17.05.2025) சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாள்களிலும், பார்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாள்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, அரசு அலுவலர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.