மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர்
மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மின்சார பேருந்துகளுக்காக கட்டமைக்கப்படும் பணிகளை சனிக்கிழமை மதியம் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்னை மாநகரத்தில் மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் முதல்வரின் ஆணைப்படி நடந்து வருகிறது.
அந்தவகையில் வியாசர்பாடி பேருந்து பணிமனை பகுதியில் மின்சார பேருந்துகளுக்கான கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கட்டமைப்பு பணிகள் மே மாத இறுதிக்குள் முடிய உள்ளது.
வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதற்கான சார்ஜ் அமைக்கும் இடங்கள் பணிமனையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் போது வடசென்னை பகுதியில் காற்று மாசு ஏற்படாமல் சிறந்த போக்குவரத்து வசதியைத் தர முடியும். காலச் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இந்த மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் சென்னை மாநகரத்தில் 5 மின்சார பணிமனைகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வியாசர்பாடியில் பணிகள் முடிவுற்று பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.
அதற்குப் பிறகு பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார் பேட்டை ஆகிய பணிமனைகளில் இந்த மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்தும் அந்த பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக 650 பேருந்துகளும் அடுத்த கட்டமாக 500 மின்சார பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் போது சென்னை மாநகரத்தில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக அமையும் .
மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதில் ஏசி பேருந்துகளும் சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கும் பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டீசல் பேருந்துகளையும் மின்சார பேருந்துகளையும் ஒரே பணிமனையில் இயக்குவதற்கான சூழல் அமையாது. எனவே, மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ள இடங்களில் உள்ள டீசல் பேருந்துகள் மாற்று பணி மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் முதல்வரின் தேதி பெற்று பேருந்துகளை இயக்கும் நாள் முடிவு செய்யப்படும்.
பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரத்தில் தாக்கியவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மற்ற பேருந்துகளுக்கு என்ன கட்டணமும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் மின்சார பேருந்து வருகையால் டீசல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.