மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி காண்போம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” என்ற நூலினை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா இன்று(மே 17) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நூலினை வெளியிட்டு உரையாற்றினார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.
அப்போது அவர் பேசியதாவது: “எல்லாவற்றையும் காவிமயம் ஆக்க வேண்டும் என்று பாஜக அரசு துடிக்கிறது. முதலில் கல்வி - அதற்காக கொண்டு வந்ததுதான் தேசியக் கல்விக் கொள்கை.
மதவாதம் உருவாக்கக்கூடிய அழிவுப் பாதையில் நாம் செல்லப் போகிறோமா? அல்லது சமூக நீதிப் பாதையில் செல்லப் போகிறோமா? என்ற முக்கியமான கேள்வியை அன்பில் மகேஸ் எழுப்பியிருக்கிறார். சமூக நீதிப் பார்வையுடன் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதையும் எழுதியிருக்கிறார்.
இந்தநிலையில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறோம் நாங்கள்.
எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜகவின் காவி மாடல்.
எல்லார்க்கும் எல்லாம் திராவிட மாடல் கருத்தியல். எல்லாம் ஒருவருக்கே என்று சொன்னால் அது ஆரிய கருத்தியல். இதுதான் ஈராயிரமாண்டுகளாக இந்தச் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் போர்.
நம்முடைய உயர்வுக்கு அடித்தளமாக இருப்பது கல்விதான். அறிவுதான் நமது ஆயுதம்!
இன்று, கல்விக்கு தடைபோடும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக நமது திராவிட மாடல் அரசு போர் வாளை சுழற்றிக் கொண்டிருக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டைச் சிதைத்திடும். இடஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும்.
தேசியக் கல்விக் கொள்கை பன்முகப் பண்பாட்டைத் தகர்த்திடும். 75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சம்ஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை கட்டமைக்கிறதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.
தேசியக் கல்விக் கொள்கையால் சம்ஸ்கிருதம் வளருமென சில நாள்களுக்கு முன், உள்துறை அமைச்சரான அமித் ஷா பேசியிருக்கிறார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ அதை உள்துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
பாடத்திட்டத்தை வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு திரிபு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லையெனில், கல்வி அனைவருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தர வேண்டிய நிதியை மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக விடுவிக்காமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கெதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரத்தான் போகிறது. இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.