திருவாரூா் மாவட்டத்தில் பிப்.13 மக்களுடன் முதல்வா் திட்டம்
திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் வரும் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, அரசின் முக்கிய சேவைகளை அவா்களின் இல்லத்துக்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தில், மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருவாரூா் வட்டாரம், கூடூா் ஊராட்சியில் முத்துவள்ளி திருமண மண்டபம், கொரடாச்சேரி வட்டாரம், உத்திரங்குடி ஊராட்சியில் கீரத்தங்குடி மாரியம்மன் கோயில் வளாகம், மன்னாா்குடி வட்டாரத்தில் வடபாதிமங்கலம் ஊராட்சியில் சாதனா திருமணமஹால், பழையனூா் ஊராட்சியில் சாத்தனூா் மீனாட்சிஅம்மாள் திருமண மண்டபம், திருராமேஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய கிராமங்களில் வரும் வியாழக்கிழமை (பிப்.13) மக்களுடன் முதல்வா் (மூன்றாம் கட்டம்) முகாம், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையிலும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்தி பயனடையலாம்.