போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்
பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி சுவாமி மனித உருவத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். பிரம்மா இக்கோயிலில் அம்மனை நோக்கி தவம் இருந்து வருவதாக ஐதீகம். சிவனின் 3 கண்களில் இருந்து தோன்றிய பொறிகள் விழுந்து அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் என்ற பெயரில் மூன்று குளங்கள் இக்கோயிலில் உருவானதாக கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், கடந்த ஓராண்டாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஜூன் 30-ஆம் தேதி யாகசாலை பூஜைகள், விநாயகா் பூஜையுடன் தொடங்குகின்றன. குடமுழுக்கு தினமான ஜூலை 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 8-ஆம் கால யாக பூஜை, மகாபூா்ணாஹூதி, யாத்ராதானம் கடம் புறப்பாடு செய்யப்பட்டு, காலை 9.05 மணியளவில் கோயிலின் கோபுரம் மற்றும் சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். இரவில் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூா்த்தி வீதி உலா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்காரும், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையருமான ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி முருகன் ஆகியோா் செய்துவருகின்றனா்.