பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!
தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது.
மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
அதன்படி, தில்லி பேரவையில் இன்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுகாதாரத் துறையில் போதிய பணியாளர்கள் இன்மை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, மொஹல்லா கிளினிக்குகளில் மோசமான உள்கட்டமைப்பு, நிதி மேலாண்மையில் அலட்சியம் ஆகியவை உள்ளதாகவும் இந்த அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த சிஏஜி அறிக்கையில், கடந்த 6 ஆண்டுகளில் கடுமையான நிதி முறைகேடு, அலட்சியம், பொறுப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது.
சிஏஜி வெளியிட்டுள்ள முக்கிய தரவுகள்
தில்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவசேவைகள் இல்லை. நகரத்தில் மொத்தமுள்ள 27 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் 16 மருத்துவமனைகளில் ரத்தவங்கிகளும் இல்லை.
அதுமட்டுமின்றி 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வினியோகமும், 15 மருத்துவமனைகளில் பிணவறைகளும் இல்லை. மேலும், 12 மருத்துவமனைகள் அவசர ஊர்திகள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
பல மொஹல்லா மருத்துவமனைகளில் கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதிகள் மற்றும் பரிசோதனை மேசைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை. ஆயுஷ் மருந்தகங்களிலும் இது போன்ற குறைபாடுகள் உள்ளன.
செவிலியர்கள் பற்றாக்குறையும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 21 சதவிகிதம் செவிலியர்கள் பற்றாக்குறையும், 38 சதவிகிதம் துணைநிலை மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையும் சில மருத்துமனைகளில் 50-98 சதவிகிதம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.
ராஜீவ் காந்தி மற்றும் ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை பிரிவுகள், படுக்கைகள் மற்றும் தனியார் அறைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை.
கரோனா மீட்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.787.91 கோடியில் ரூ.582.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.30.52 கோடி செலவிடப்படாமல் இருக்கிறது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.83.14 கோடியும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
32,000 புதிய மருத்துவமனை படுக்கைகளில், 1,357 (4.24 சதவீதம்) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் தரையில் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
லோக் நாயக் மருத்துவமனையில் நோயாளிகள் பொது அறுவைச் சிகிச்சைகளுக்கு 2-3 மாதங்களும், தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகளுக்கு 6-8 மாதங்களும் காத்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.