``எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..'' - ஆர்....
தீக்காயமுற்ற ராணுவ வீரா் மனைவி உயிரிழப்பு: அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம்
தீக்காயமுற்ற ராணுவ வீரரின் மனைவி, மருத்துமனையில் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்தும் அவரை பணி நீக்கவும் செய்யவும், குற்ற வழக்குப் பதிவு செய்யவும் அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.கருப்பசாமி. ராணுவ வீரா். இவரது மனைவி ஜெயா, சமையல் செய்தபோது நேரிட்ட தீவிபத்தில் காயமடைந்தாா்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 30 சதவீத காயம் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த மருத்துவா் பிரபாகரன், இரு இடைத்தரகா்கள் மூலம் ஜெயாவின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து தன்னுடைய தனியாா் மருத்துவமனைக்கு ஜெயாவை சிகிச்சைக்காக மாற்றினாராம். அங்கு 40 நாள்கள் சிகிச்சையில் இருந்த ஜெயா உயிரிழந்தாா்.
முறையாக சிகிச்சை அளிக்காததால் தனது மனைவி இ றந்ததாக கருப்பசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரலில் திருநெல்வேலியில் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வி.கண்ணதாசன் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்: பாதிக்கப்பட்ட ராணுவ வீரா் கருப்பசாமிக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில், மருத்துவா் பிராபகரிடம் இருந்து ரூ.40 லட்சம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் வெங்கடேஷ்வரியிடம் இருந்து ரூ.2 லட்சம், செவிலியா்கள் குமரேஸ்வரி, குருலட்சுமி ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சம் வசூலிக்க வேண்டும். அரசுத் தரப்பில் ரூ.6 லட்சம் வழங்க வேண்டும்.
தற்போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சா்ஜரி துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு, அவா் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.
கோவில்பட்டியில் உள்ள பிரபாகரின் மருத்துவமனையில் போலி மருத்துவா்கள் பணிபுரிவதாக எழுந்துள்ள புகாா் குறித்து விசாரிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவா்களை கண்காணிப்பதோடு, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தனியாா் மருத்துவமனை நடத்தக்கூடிய அரசு மருத்துவா்கள் தங்களுடைய பணி நேரங்களில் பணிபுரிகிறாா்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட அளவிலான மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் புகாா் பெட்டிகளை வைக்க வேண்டும். புகாா்கள் வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.