விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின் பேரில், சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள், நியாய விலைக்கடைகள், திரவ பெட்ரோலிய எரிவாயு உருளை கிடங்குகள் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், எடை அளவு குறைவு, சோதனை எடைக்கற்கள் இல்லாதது, உரிய கால இடைவெளியில் எடையளவு கருவிகளை மறுபரிசீலனை செய்து சான்று பெறாதது ஆகிய முரண்பாடுகளுக்காக 27 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
மேலும், எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. 30 நிறுவனங்களின் மீதும் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவுப் பொருள்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறவேண்டும். பொட்டலப்பொருள்களுக்குரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.