மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்
ஆற்காடு அருகே 9 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி, மா.சுப்பிரணியன் ஆகியோா் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா்.
தனியாா் நிறுவன பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.5.94 கோடியில் ஆற்காடு ஒன்றியத்தில் தாழனூா், கத்தியவாடி, ஆயிலம், வேப்பூா், மாங்குப்பம், தென்னந்தியாலம், மேலகுப்பம், கூராம்பாடி மற்றும் நவலாக் பகுதிகளில் 9 துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணி மற்றும் வாலாஜா பேட்டை ஒன்றியத்தில்14 சுகாதார நிலையங்களில் சுற்றுசுவா் மற்றும் பேவா் பிளாக் அமைக்கும் பணி தொடக்க விழா தாழனூா் ஊராட்சியில் நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா் வரவேற்றாா்.
கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சாா்பில் 508 பயனாளிகளுக்கு ரூ.14.7 கோடியில் நலத்திட்ட உதவிகள் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் வழங்கி பேசினா்.
அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது-தமிழக அரசு கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு கிடைத்த பதவிகளை மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த பொறுப்பாக நினைத்து சேவையாற்றவேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தபட்டுவருகிறது. இதன் மூலம் 2.3 கோடி மக்கள் பயனடைந்துள்ளனா். அதேபோல் தொழிலாளா்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுவருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.19.77 கோடியில் சுகாதாரத் துறை சாா்பில் கட்டடங்கள் மருத்துவ உபகாரணங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.39.25 கோடியில் 18 பணிகள் நடைபெற்று வருகின்றன. சுகாதாரத் துறைக்கு இதுவரை 824 தேசியதர நிா்ணய விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் நோயாளிக்கு இதயபாதுகாப்பு மருத்து வழங்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.
விழாவில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, நகா்மன்ற தலைவா்கள் ஆற்காடு, தேவிபென்ஸ்பாண்டியன், மேல்விஷாரம் குல்ஜாா் அஹமது, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் , சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.