தூத்துக்குடி: மனைவி மீது சந்தேகம்; வெட்டிக் கொலை செய்த கணவன் தலைமறைவு.. நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம், நம்மாழ்வார் நகரைச் சேர்ந்தவர் மரியசாமுவேல். இவரது மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே கணவர் மரியசாமுவேல் மனைவி ஜோஸ்பின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (21-ம் தேதி) இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மரியசாமுவேல் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாலம் வரை மனைவியின் உடலை தரதரவென இழுத்துச் சென்று அங்கு குழி தோண்டி புதைக்க முயன்றுள்ளார். அதற்குள் விடிந்து விட்ட காரணத்தால் மனைவியின் உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி உள்ளார்.
இதற்கிடையில் இன்று காலையில் ஜோஸ்பினின் மூத்த மகன் அருள்ராஜ் தனது தாய்க்கு போன் செய்துள்ளார். ஆனால் பல முறை அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதற்கிடையில் தனது தாயின் தம்பியான ஜான்போஸ்கோவுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அவர் வீட்டில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.

ஆனால், வீட்டின் முன்பு இருந்து ரத்தகரை ஊருக்கு வெளியே வரை கிடந்தது. ரத்தக்கரையை பின்தொடர்ந்து பார்த்தபோது பாலத்தின் கீழ் ஜோஸ்பின் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான கணவர் மரியசாமுவேலை போலீஸார் தேடி வருகின்றனர்.