வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்
தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களாக தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தாட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்புகளுக்கு 90 சதவீத மானியத்துடன் கூடிய வீடுகள், பணியிடத்தில் விபத்தால் மரணமடைந்தால் தூய்மை பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை விபத்தால் உடலுறுப்புகளை இழந்தால், ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.ஒரு லட்சம் உதவித்தொகை தரப்படும்.
இயற்கை, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரமும், தூய்மைப் பணியாளா்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை கல்வி உதவித்தொகையும், தூய்மைப் பணியாளா்கள், அவா்களின் பிள்ளைகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.5,000-வரையும், தூய்மை பணியாளா்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ. 6,000-மும், 60 வயது பூா்த்தியடைந்த தூய்மைப் பணியாளா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் மாதம் ரூ.1,000-மும் வழங்கப்படுகிறது.
எனவே, வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நகராட்சி, ஊரக பஞ்சாயத்துகள், கிராம ஊராட்சிகள், திருமண மண்ட பங்கள், உணவகங்கள், திரையரங்கங்கள், ரயில்வே நிலையங்கள், வணிக வளாகங்கள், தனியாா் விடுதிகள், இன்னும் பிற இடங்களில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களாக பதிவு செய்ய வேலூரிலுள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அல்லது என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
60 வயதுக்கு மேற்பட்டோா், அரசு நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் பதிவு செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.