தென்காசி: முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 5 பேர் பலி; உரிமையாளர் கைது; பின்னணி என்ன?
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார்.
8 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் முதியோர் இல்லத்தில் கடந்த 11 ஆம் தேதி மதியம் அசைவ உணவருந்திய சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 16 முதியோர்கள் தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின் உயர் சிகிச்சைக்காக மதுரை மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளுக்குச் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ், சொக்கம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா மற்றும் முருகம்மாள், தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்ற முதியவரும் தற்போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேர்களில் எட்டு பேர் நலமுடன் இருப்பதாகவும் மீதமுள்ள மூன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தென்காசி எஸ்பி எஸ்.அரவிந்த் காப்பக உரிமையாளர் ராஜேந்திரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் இந்தக் காப்பகத்திற்கு வருவாய்க் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சம்பவத்தன்று காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போனதா அல்லது வேறு ஏதும் கலந்துள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு முடிவுகள் வெளிவரும் பட்சத்தில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.