தென்னிந்தியாவில் ஹிந்தி படங்கள் வெற்றி பெறுவதில்லை: சல்மான் கான்
தென்னிந்தியாவில் எனது படங்கள் வெளியாகும்போது பாக்ஸ் - ஆபிஸ் வெற்றி கிடைக்காது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் சிக்கந்தர் . இதில், ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளனர்.
ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற மார்ச் 30 ரமலான் என்று வெளியாகிறது.
இந்த நிலையில், சிக்கந்தர் படக்குழுவினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய திரைத்துறை பற்றி சல்மான் கான் பேசினார்.
அதில், “தென்னிந்தியாவில் எனக்கு மிக வலுவான ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் அன்பை எப்போதும் நான் அனுபவித்து வருகிறேன். ஆனால், எனது படங்கள் அங்கு வெளியாகும்போது அந்த அன்பு பாக்ஸ் - ஆபிஸ் வெற்றியாக மாறாது. அவர்களைத் திரையரங்குகள் நோக்கி இழுப்பது மிகவும் சவாலாக உள்ளது.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா போன்ற பல தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட்டில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. நாங்களும் அவர்களின் படங்களைப் பார்க்கின்றோம். ஆனால், அதேபோல எங்களுக்கு நடப்பதில்லை
தென்னிந்திய சினிமா தனித்துவமானது. அதில், கலாச்சாரத்துடனான இணைப்பு இருக்கும். அதனால்தான் பான் இந்தியா படங்கள் தொடர்ந்து வெளியாகும் போக்கு இருந்தாலும் பாலிவுட் ஹிந்தி திரைப்படங்கள் அங்கு பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை” என்று பேசினார்.
பான் இந்தியா திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவது பற்றிப் பேசிய அவர், “புஷ்பா திரைப்படம் எப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான சினிமா பான் இந்தியாவுக்கானதாக மாறும் என்பதைக் காட்டியது.
ஆனால், அதுபோன்ற படங்களை உருவாக்க பெரிய நிதி முதலீடும் அனைவருக்கும் பொதுவான கதைக் களமும் தேவைப்படும்” என்று அவர் கூறினார்.