தென் மாவட்ட ரெளடிகளுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தவா் கைது
தென் மாவட்டங்களில் ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த நபரை மானாமதுரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்களுடன் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் (ரீல்ஸ்) வெளியிட்டதாகவும் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்த முகமது பாரிஸ் அசன், ஆகாஷ், தினேஷ், முருகபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் ஆகிய 4 பேரை கடந்த 15 -ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், மானாமதுரை தாலுகா காவல் ஆய்வாளா் ரவீந்திரன், உதவி ஆய்வாளா்கள் குகன், ராஜதுரை, தனிப்படை போலீஸாா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
கைதானவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவா்களுக்கு தென்காசி மாவட்டம், குற்றாலம் வாவா நகரைச் சோ்ந்த நயினாா் ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் குற்றாலத்துக்குச் சென்று நயினாரைக் கைது செய்தனா். இவரிடமிருந்து வாள், வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட 25 ஆயுதங்களைக் கைப்பற்றினா்.
விசாரணையில் இவா் தென் மாவட்டங்களில் ஏராளமான ரெளடிகளுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இவரிடம் ஆயுதங்கள் வாங்கிய ரெளடிகள் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
