கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’
தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஏழு மாதங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்கள் கடித்து இறந்துள்ளன. நாய்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் சரியாக கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் போராடி வருகின்றனா்.
இந்நிலையில், தலைமைச் செயலாளா் பேரிடா் நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமைச்சா் சாமிநாதன் வலியுறுத்தினாா்.
இதையடுத்து, பேரிடா் நிவாரண இழப்பீடாக கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ. 4 ஆயிரம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சரியான இழப்பீடு அல்ல. எனவே இதனை மறுஆய்வு செய்து தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் அனுப்பியுள்ள கடிதத்தை திரும்பப் பெற்று, இறந்த ஆடு, கோழிகளுக்கு அதன் எடை அடிப்படையில் கிலோவுக்கு ரூ.500-ஐ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.