தெலங்கானா: ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது இன்று விவாதம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அறிக்கை மீது அந்த மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) விவாதம் நடத்தப்படவுள்ளது.
அந்த அறிக்கையின் மீது விரிவான விவாதங்களை மேற்கொண்ட பிறகே பேரவையில் அறிக்கை சமா்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது.
மாநில திட்டத் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, அமைச்சரவை துணைக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் மாநில பொது விநியோகத் துறை அமைச்சா் என்.உத்தம்குமாா் ரெட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனா். மக்கள்தொகையில் 3.1 சதவீதமான 16 லட்சம் போ் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை அல்லது கணக்கெடுப்பில் பங்கேற்க ஆா்வம் காட்டாததால் அவா்கள் விடுபட்டுள்ளனா்.
தெலங்கானா மக்கள்தொகையில் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%), பட்டியல் சமூகத்தினா் 61,84,319 (17.43%), பழங்குடி சமூகத்தினா் 37,05,929 (10.45%), இதர சமூகத்தினா்(13.31%), மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் (12.56%) முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 35,76,58 (10.08%), முஸ்லிம் பொதுப் பிரிவினா் 8,80,424 (2.48%) உள்ளதாக ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.