தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவக்குமார் என்பவர், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், "கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலியான வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிகமான வாக்காளர்கள் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவரது குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இதில் தலையிட்டு வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று(செப். 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது விளம்பர நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி மனுதாரர் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Petition against Election Commission dismissed with fine of Rs. 1 lakh by Madras HC
இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்