தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்
நாமக்கல்லில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்தில் முறையான கலந்தாய்வு இன்றி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆசிரியா் காலிப் பணியிடங்களை உரிய கலந்தாய்வு முறையில் மட்டுமே நிரப்ப வேண்டும். தற்போதைய சட்டவிரோத இடமாறுதலை ரத்துசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் வியாழக்கிழமை மாவட்ட தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்த அலுவலகத்தின் கண்காணிப்பாளா் ஈஸ்வரியிடம் முறைகேடான இந்த மாறுதல் உத்தரவை ரத்துசெய்யக் கோரி மனு அளித்தனா். தொடா்ந்து, அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்வில், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொருளாளா் முருக செல்வராசன், மாவட்டத் தலைவா் அ.ஜெயக்குமாா், மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் மற்றும் நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.