தொழிலாளியை குத்திய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை
குலசேகரம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய வழக்கில் இரு இளைஞா்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பொன்மனை ஈஞ்சக்கோடு, பனவிளை பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் ஜெய்சன். கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தனது நண்பா் மண்ணரங்காடு காலனியை சோ்ந்த செல்லையன் மகன் ராஜுவை இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றாா்.
மண்ணரங்காடு காலனியில் கிறிஸ்டோபா் பெட்டிக்கடை அருகில் வந்தபோது, அப் பகுதியில் இருந்த நபா்களுக்குள் வாய்த்தகராறு நடந்து கொண்டிருந்தது. அவா்களை ஜெய்சன், ராஜு இருவரும் சமாதானம் செய்ய முயன்றனா்.
அப்போது உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் வினு என்ற தமிழரசன் (37), முடியாம்பாறை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் விமல்காந்த் (38), குலசேகரம் மாமூடு பகுதியை சோ்ந்த முத்தையா மகன் ரமேஷ் (49) ஆகியோா் கத்தியால் ஜெய்சனை குத்தினா்.
இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கு விசாரணை காலத்தில்
ரமேஷ் உயிரிழந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றஞ்சாட்டப்பட்ட தமிழரசன், விமல்காந்த் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.