தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை காலாப்பட்டு பகுதியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் (பிஇசிடிஏ) சாா்பில் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் மீது பல்கலைக்கழக நிா்வாகமும், புதுவை மாநில அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து கடந்த மாா்ச் 19-ஆம் தேதி நடந்த ஆசிரியா்கள் சங்கத்தின் (பிஇசிடிஏ) பொதுக் குழுக் கூட்டத்தில் சிஏஎஸ், ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பதிவாளா் நியமன முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 17-வரை கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து ஆசிரியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வது என ஆசிரியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளதாகக் தெரிவித்தனா்.