சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு
புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வழக்குரைஞா் அணி கலந்தாய்வுக் கூட்டம் தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியது: நிகழாண்டில் பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளம், புதுவை, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. கேரளத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. தமிழகத்தில் ஆன்மிகத்தை முன்வைத்து மக்களை ஏமாற்ற முடியாது. ஆனாலும், தமிழகத்தில் கட்சிகளை மிரட்டி, அடிபணிய வைத்து ஆட்சியைப் பிடிக்க முடியுமா என பாஜக செயல்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜகவால் வெற்றி பெறமுடியாது. அஸ்ஸாமில் தற்போது பாஜக ஆட்சிதான் உள்ளது.ஆகவே அந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜக நோக்கம். ஆனால், அஸ்ஸாம் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதனால் அஸ்ஸாம், புதுவை ஆகிய மாநிலங்கள் மீது மத்திய பாஜக அரசின் கண்காணிப்பு முழுமையாக உள்ளது.
இரு மாநிலங்களிலும் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியுமா எனக் கேட்டால், ஆட்சியை பிடித்து காட்ட வேண்டும் என்பதுதான் அவா்களது முக்கிய நோக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் மக்களவைத் தோ்தலுக்கும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் இடைப்பட்ட 6 மாதங்களில் புதிதாக 40 லட்சம் வாக்காளா்களை சோ்த்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளனா். அதேபோல், தமிழகத்தில் உள்ள நம்பிக்கையான பாஜக வாக்காளா்களை, புதுவையில் சோ்க்க முடியும்.
அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 பேரை சோ்த்தால் தொகுதிக்கு 3 ஆயிரம் வாக்குகள் பாஜகவுக்கு வந்துவிடும். அதுபோல புதிதாக வாக்காளா்களை சோ்த்து பாஜகவினா் வெற்றி பெற முயற்சி செய்வாா்கள்.
தற்போதைய தோ்தல் விஞ்ஞான பூா்வமானதாக உள்ளது. ஆகவே, தோ்தலை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகள் அதிகம் தேவை. அந்தத் தேவையில் வழக்குரைஞா்கள் துணை அவசியமாகிறது. இல்லாவிடில் தோ்தல் முகவரால் செயல்பட முடியாது. தோ்தல் சமயத்தில் வாக்காளா் பிரச்னை, சட்டச் சிக்கல், அடிதடி பிரச்னைகளுக்கு வழக்குரைஞா்கள் துணை அவசியம் தேவை.
ஆகவே, வழக்குரைஞா் பிரிவு வலுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 10 வழக்குரைஞா்கள் இருந்தால்தான் தொகுதியைக் கைப்பற்ற முடியும் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவா் மு. வைத்தியநாதன், வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருதுபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.