தோள்பட்டை பிரச்னையிலும் அபாரமாக பந்துவீசிய சஹால்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஹாலுக்கு போட்டிக்கு முன்பாக தோள்பட்டை பிரச்னை இருந்ததாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் குறைவான ரன்கள் அடித்தும் அதைக் கட்டுப்படுத்தி வென்ற முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
இந்த வரலாற்று வெற்றி குறித்தும் சஹால் குறித்தும் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:
சமச்சீரற்ற பிட்ச்
இன்னமும் எனது இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. 50 வயதாகும் எனக்கு இதுபோல் பல போட்டிகள் வேண்டாம். 112 ரன்களை கட்டுப்படுத்தி 16 ரன்களில் வென்றிருக்கிறோம்.
சில நேரங்களில் இந்த மாதிரியான சிறிய இலக்குகளை சேஸிங் செய்யும்போது மிகவும் கடினமானது என போட்டியின் பாதியில் நாங்கள் கூறினோம். ஏனெனில் இந்த பிட்ச் அவ்வளவு எளிதாக இல்லை. பந்து சற்று நின்று வந்தது. சஹால் வீசிய ஓவரை என்னவென்று பாராட்டுவது!
போட்டிக்கு முன்பாக சஹாலுக்கு தோள் பட்டை பிரச்னை இருந்தது. அதனால் அவரது உடல்நலம் குறித்து பரிசோதிக்க வேண்டியிருந்தது.
சஹாலின் தன்னம்பிக்கை
பயிற்சியில் இருந்தவரை அழைத்து, ‘நண்பரே, உங்களுக்கு உடல்நலன் நன்றாக இருக்கிறதா?’ எனக் கேட்டேன். அதற்கு சஹால், ‘பயிற்சியாளரே, நான் 100 சதவிகிதம் நன்றாக இருக்கிறேன். என்னை விளையாட அனுமதியுங்கள்’ என்றார்.
இந்தப் போட்டியில் சஹால் என்ன மாதிரியான ஒரு பந்துவீச்சை வீசினார். நாங்கள் இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் இரண்டாம் பாதியில் நாங்கள் சென்ற விதத்துக்கு பெருமைப்பட்டிருப்போம்.
நான் ஐபிஎல் போட்டிகளில் பல ஆட்டங்களுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஆனால், இதுதான் எனது சிறந்த வெற்றி எனக் கூறினார்.