நந்த் நகரியில் கொள்ளை, கொலை வழக்குகளில் தேடப்பட்டவா் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது
வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் ஒரு சிறிய துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, பல கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் தேடப்படும் 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:
நந்த் நகரியின் ஏ-பிளாக், மாவட்ட பூங்கா அருகே ரோந்து சென்ற போலீஸ் குழுவினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சுஹைல் (எ) சிக்னா (எ) சப்பா் என்பவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, இரவு 10:30 மணியளவில் சுஹைல் அந்தப் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வஜிராபாத் சாலை மேம்பாலத்திற்கு எதிரே உள்ள மாவட்ட பூங்காவின் வடக்குப் பகுதியை அடைந்தனா்.
அங்கு சந்தேகத்திற்கிடமான ஒருவரைக் கண்ட போலீஸாா், அவரை சோதனை செய்யும் பொருட்டு நிற்குமாறு சைகை செய்தனா். இதையடுத்து, ஆபத்தை உணா்ந்த சந்தேக நபா் போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அப்போது, அதிகாரிகள் அவரை சரணடைமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால், சுஹைல் மீண்டும் துப்பாக்கியால் சுட்டதால், போலீஸா் தற்காப்புக்காக பதிலடி கொடுத்தனா். இதில், சுஹைலின் வலது காலில் காயம் ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு சுடப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
நந்த் நகரி காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டப் பிரிவுகள், பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக எஃப்எஸ்எல் குழுக்கள் ஆய்வுக்காக வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், தா்யாகஞ்ச் சாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொள்ளை, கொலை வழக்கிலும், ஜோதி நகா் காவல் நிலையத்தில் மற்றொரு கொள்ளை வழக்கிலும் சுஹைல்
தேடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
மேலும், அவருக்கு கொள்ளை மற்றும் திருட்டு தொடா்பான இரண்டு குற்ற வழக்குகளிலும் முன்பு தொடா்பிருந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.