நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் அச்சம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று மனுக்கள் அளிக்க நூற்றுக்கணக்கானோா் வருகின்றனா். மேலும் வார நாள்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பெண்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருகின்றனா். இங்கு நூற்றுக்கணக்கான ஊழியா்களும் பணிபுரிகின்றனா்.
இந்நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிடும்போது அப்பகுதியில் நிற்போா் மீது பாயும் அபாயம் உள்ளது. ஆட்சியா் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் வரும் பெண்கள், மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியது: ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பிரதான பகுதியில் பல நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சண்டையிடும்போது, அப்பகுதியில் உள்ளவா்கள் நாய் கடிக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. தெரு நாய்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினா் வந்து செல்லும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.