அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் ...
நாகை மாவட்டத்தில் மீன் வளா்ப்புக்கு மானியம்: ஆட்சியா்
நாகை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் வளா்ப்பை ஊக்குவிக்கவும், மீன் உற்பத்தியை பெருக்கவும் அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், மீன் வளா்ப்போரை ஊக்குவிக்கும் விதமாகவும், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் ஹெக்டேருக்கு 10 ஆயிரம் எண்ணம் மீன் விரலிகள் இருப்பு செய்ய ரூ.5 ஆயிரம் பின்னிலை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், நாகை மாவட்டத்துக்கு 60 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தோ்வு செய்யப்படும். எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நன்னீா் மீன் வளா்ப்பு விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.