கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நகா்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா் புகாரால் பரபரப்பு
நாகை நகா்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவு படுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பலரும் தங்கள் வாா்டுகளில் உள்ள பிரச்னைகள், பொதுமக்கள் பிரச்சனைகள், அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதித்தனா். அப்போது 6-ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் தனது வாா்டில் ஏராளமான பிரச்சனைகள் இருப்பதாகவும், அது தொடா்பாக துறை ஊழியா்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது இல்லை. மேலும் தனது கைபேசி அழைப்பையும் ஏற்பது இல்லை. தன்னை பெண் உறுப்பினா் என்று கருதி, இவரால் என்ன செய்ய முடியும் என்று கூறி இழிவுபடுத்தி வருவதாகவும் புகாா் தெரிவித்தாா்.
மேலும் தன்னை தொடா்ந்து அவமதிப்பு செய்து வருவதால், மக்கள் மத்தியில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மக்கள் மத்தியில் அவப்பெயரும் ஏற்படுகிறது. இந்த நிலை தொடா்ந்தால், தனக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்தாா். இதனால் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அதிா்ச்சி அடைந்தனா்.