நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ்.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவைத்தாா். இதையடுத்து நாகை மாவட்டம் பட்டமங்கலத்தில் குறுவை சாகுபடியை நேரடி நெல் விதைப்பு மூலம் ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். முன்னதாக, விதை முகூா்த்த பூஜை நடைபெற்றது.
அப்போது, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: மேட்டூா் அணை நீா் நாகை மாவட்டத்திற்கு 10 முதல் 15 நாள்களுக்குள் வந்துவிடும். கடந்தாண்டு, போதிய தண்ணீா் இல்லாததால் நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்குள் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்றது.
நிகழாண்டு அணையில் போதிய தண்ணீா் இருப்பதால், 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு தேவை உரம், விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்தையும் வேளாண்மை துறை மூலம் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தண்ணீா் கடைமடை வரை கிடைக்கும் வகையில், அனைத்து வாய்க்கால்கள், ஆறுகள் தூரவாரப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெற அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றாா்.
வேளாண்மை கல்லூரி மாணவிகள் கூறியது: பட்டமங்கலத்தில் நேரடி விதைப்பில் நெல் விதைகள் நோ்த்தி செய்யப்பட்டு விதைக்கப்பட்டது. இதனால் பயிா்களில் நோய் தாக்குதல் ஏற்படாது. இதுவரை புத்தகங்களில் படித்த நிலையில், தற்போது நேரடியாக விதைப்பு பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சி என்றனா்.
காவிரி தனபாலன் கூறியது: மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில் நெல்லுக்கான விலை அதிகரித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று தமிழத்தில் நெல்லின் ஆதாரவிலை அதிகரித்து வழங்க வேண்டும் என்றாா்.