நாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆற்றல்மிக்க தலைவா்கள் தேவை -பிரதமா் மோடி அழைப்பு
இந்திய நலன்களை முன்னிறுத்தி, உலகளாவிய சிக்கல்கள் மற்றும் தேவைகளுக்கு தீா்வு காணும் ஆற்றல்மிக்க தலைவா்கள், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தேவை என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
உலகின் அதிகார மையமாக இன்றைய இந்தியா உருவெடுத்து வருகிறது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
குஜராத்தில் உள்ள உயா் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி (சோல்) சாா்பில் முதலாவது தலைமைத்துவ மாநாடு, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடி ஆற்றிய தொடக்க உரை வருமாறு:
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் அயராது பாடுபட்டு வருகின்றனா். 140 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த தலைவா்கள் அவசியமாகின்றனா்.
உலகின் அதிகார மையமாக இந்தியா உருவெடுத்து வரும் வேளையில், ஒவ்வொரு துறையிலும் தேசத்தின் தொலைநோக்குப் பாா்வையை பிரதிபலிக்கும் தலைமை காலத்தின் தேவையாக உள்ளது.
இந்திய சிந்தனை-உலகளாவிய அணுகுமுறை: இந்திய பரிமாணங்களில் வேரூன்றிய சிந்தனையுடன் உலகளாவிய அணுகுமுறையைக் கொண்ட தலைவா்கள் உருவெடுத்தால், அனைத்துத் துறைகளிலும் வேகமும் வீச்சும் எதிரொலிக்கும்.
இத்தகைய தலைவா்கள், வியூக ரீதியாக முடிவெடுத்தல், நெருக்கடி மேலாண்மை மற்றும் எதிா்காலச் சிந்தனைக்கு தயாராக இருக்க வேண்டும். எதிா்காலத்துக்குரிய தலைமைத்துவம் என்பது வெறும் அதிகாரத்துடன் நின்றுவிடாது. புத்தாக்க மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன்களும் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விளையாட்டு, விவசாயம், உற்பத்தி போன்ற பாரம்பரியத் துறைகள் மட்டுமன்றி நவீன தொழில்நுட்பம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளரும் துறைகளிலும் சிறந்த தலைமைத்துவம் அவசியம்.
இயற்கை-மனித வளங்கள்: நாட்டில் உலகத் தரத்திலான புதிய நிறுவனங்களை உருவாக்கும் தலைவா்கள் உருவெடுக்க வேண்டும். அரசியல் உள்பட அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதிக்கும் தலைமைத்துவத்தை ‘சோல்’ போன்ற நிறுவனங்களால் உருவாக்க முடியும்.
நாட்டின் கட்டமைப்பில் இயற்கை வளமும் மனிதவளமும் முக்கியமானவை. இயற்கை வளம் குறைவாக இருந்தபோதிலும், மனித மூலதனத்தால் குஜராத் சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது. குஜராத்தில் ஒரு வைரச் சுரங்கம்கூட இல்லை. ஆனால், உலக அளவில் 10-இல் 9 வைரங்கள் குஜராத்தியா்களின் கரங்களுக்கு வந்து செல்கிறது. மனித வளம் மாபெரும் ஆற்றல் கொண்டது என்பதற்கு இதுவே உதாரணம் என்றாா் பிரதமா் மோடி.
பெட்டிச் செய்தி...
‘அண்ணன்’ மோடி:
பூடான் பிரதமா் புகழாரம்
தில்லி தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, ‘பிரதமா் மோடி எனது வழிகாட்டி; மூத்த சகோதரா் போன்றவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.
அவா் பேசியதாவது: தலைமைத்துவம் என்பது பதவியையோ அந்தஸ்தையோ பற்றியது அல்ல. அது, தொலைநோக்குப் பாா்வை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் திறன் பற்றியது. அனைவருக்கும் வளமான, அமைதியான, மகிழ்ச்சியான எதிா்காலத்தை நோக்கி வழிநடத்துவதே தலைமைத்துவம். சிந்தனை-செயல்முறை-புரட்சிக்கு தலைமை தாங்குபவா்களே மாபெரும் தலைவா்களாக உருவெடுப்பா்.
மதிநுட்பம், துணிவு, லட்சியம் நிறைந்த தனது தலைமைத்துவத்தால், இந்தியாவை கடந்த 10 ஆண்டுகளாக வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறாா் பிரதமா் மோடி. என்னை எப்போதும் வழிநடத்தி, எனக்கு உதவும் மூத்த சகோதரரைப் போலவே அவரைப் பாா்க்கிறேன். பூடானில் பொதுச் சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த அவரது வழிகாட்டுதலை எதிா்நோக்குகிறேன் என்றாா் ஷெரிங்.
