லலித் மோடியின் வானுவாட்டு குடியுரிமை ரத்து! இந்தியாவுக்கு நாடு கடத்தல்?
நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை: ப.சிதம்பரம்
புதுதில்லி: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கை வெற்றிபெறாவிட்டால், மும்மொழிக் கொள்கையைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் ப.சிதம்பரம், நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “ பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கூறப்படும் இந்த நேரத்தில், இருமொழிக் கொள்கை வெற்றிபெறாவிட்டால், மும்மொழிக் கொள்கையைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது. நான் ஒரு விஷயத்தை மிகவும் உறுதியுடன் சொல்கிறேன். நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பொதுவான மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்திதான் இருக்கிறது.
கூடுதாக வேறு எந்தவொரு மொழி கற்பிக்கப்பட்டாலும், அது சமஸ்கிருதம், இது இந்தியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ் அல்லது தெலுங்கு பேசும் ஆசிரியர்கள் என்ற பேச்சு ஒருபுறம் இருக்கட்டும், மிக சில அரசுப் பள்ளிகளில்தான் ஆங்கிலம் பேசும் ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில், மத்திய அரசால் நடத்தப்படும் 52 கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. அங்கு பயிற்றுவிக்கப்படும் மொழி ஆங்கிலம். அதோடு, இந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றைதான் கற்பிக்கின்றன. அவர்கள் தமிழைக் கூட கற்பிப்பதில்லை. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட மும்மொழிக் கொள்கை கிடையாது.
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கட்சிகள் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழை பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் உள்ளது.
அதேநேரத்தில், ஏராளமான தனியார் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தி படிப்பதற்கு எந்தவொரு குழந்தையும் தடுக்கப்படவில்லை என்ரு கூறினார்.
மேலும், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற 'தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபா' உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் தாமாக முன்வந்து இந்தி படித்து பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே, ஒரு குழந்தை இந்தி படிக்க விரும்பினாலும் படிக்க முடியாது என்ற நிலை இல்லை.
தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை
இங்கே எதிர்ப்பு எங்கே எழுகிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதில்தான். கிராமப்புறங்களில் அதுவும் நாம் சரியாக பயிற்றுவிப்பதில்லை. கிராமப்புற குழந்தைகள், நகர்ப்புறங்களில் ஏழ்மை பின்னணி உள்ள குழந்தைகளில் எவ்வளவு பேருக்கு ஆங்கிலம் நன்றாக வருகிறது. எனவே, இருமொழிக் கெள்கை இருப்பது நல்லது. அந்த இரு மொழிக் கொள்கையை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆங்கிலம் வெற்றிகரமாக கற்பிக்கப்பட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, "மூன்றாவது மொழி பற்றி பேசுவதற்கு முன் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்பிப்பது முக்கியம்." என மேலும் கூறினார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கடுமையாக சாடியதோடு, அவர் ஒருபோதும் வெல்ல முடியாத போராட்டத்தை மீண்டும் தொடங்கியதன் விளைவுகளை அவர் சந்தித்ததாகக் கூறினார்.
மும்மொழிக் கொள்கை திணிப்பது தொடர்பான சர்ச்சையின் மத்தியில், பாஜக தமிழ்நாட்டில் ஒரு கேலிப் பொருளாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியவர், தமிழ்நாட்டில் இந்தி திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது," என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதும் என ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பாஜக தவிர்த்து மற்ற அரசியல் கட்சியினர் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.