விலை அதிகரித்த Bank Stocks, முதலீடு செய்யலாமா? | IPS Finance - 231 | Nifty | Sen...
நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு
நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது உப்பூர். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள அந்த கிராமத்தில் சுடலை மாடசாமி கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வழிபட வருவார்கள். சுடலை மாடசாமி கோயிலில் கடந்த 6-ம் தேதி இரவு கொடைவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன் முக்கிய நிகழ்வாக சாமியாடிகள், மயான வேட்டைக்காக தீப்பந்தங்களை ஏந்தியபடி மயானத்துக்குச் சென்று திரும்புவது வழக்கம். அதன்படி, மயானத்துக்கு சாமியாடிகள் சென்றார்கள். அங்குள்ள சுடுகாட்டில், இறந்த ஒருவரது பிணம் எரிந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அங்கு சென்ற சாமியாடிகள் பிணத்தின் மண்டையோடு, கை எலும்புகள் ஆகியவற்றை தூக்கி வந்தனர்.

கொடை விழாவில் சாமியாடிகள், மனித மண்டையோடு மற்றும் எலும்புகளுடன் கோயிலில் ஆக்ரோஷமான சாமியாடினார்கள். ஒரு கையில் மனித எலும்பு, மற்றொரு கையில் வீச்சரிவாள் ஏந்தியபடி, நாக்கைத் துருத்திக் கொண்டு சாமியாடிகள் ஆடியதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். இந்த கொடைவிழா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வீரவநல்லூர் போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், கொடை விழாவில் சாமியாடியவர்கள், கோயில் பூசாரி உள்பட 5 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்கள்.
ஏற்கெனவே 2021-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இதேபோன்று மனித எலும்புகளை எடுத்து வந்த விவகாரம் சர்ச்சையானதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பொதுவாக சுடலை மாடசாமி கோயில்களில் சாமக் கொடைக்காக மயானம் செல்லும் சாமிகள், மனித உடலின் எச்சங்களைத் தோண்டியெடுத்து வருவது காலங்காலமாக நடக்கும் வழக்கம். அண்மைக் காலத்தில் மயானத்துக்கு சென்றுவிட்டு திரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் சில கிராமங்களில் மட்டும் இப்போதும் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்து வருகிறார்கள். ஊர்காடு கோயிலில் எப்போதும் சாமியாடிகள் எலும்புகளை எடுத்து வந்து சாமியாடுவார்கள். இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான காட்சிகள் வெளியானதால் இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிதாக ஆக்கப்பட்டு விட்டது" என்கிறார்கள்.