சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!
தொடர்ந்து 5-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,574.31 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. காலை 11.30 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 118.32 புள்ளிகள் குறைந்து 81,605.69 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.70 புள்ளிகள் குறைந்து 25,026.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில் வார இறுதி நாளில் மட்டும் கடும் சரிவைச் சந்தித்தது. இந்த வாரமும் தொடர்ந்து 4-ம் நாளாக பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது முதலீட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், முந்தைய நாள்களை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் மாற்றமில்லாமல் (சென்செக்ஸ் 100 புள்ளிகள் வித்தியாசத்தில்தான்) உள்ளது.
அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றும் ஐடி பங்குகள் சரிவில் உள்ளன.
துறைகளில் உலோக குறியீடு 1%, தொலைத்தொடர்பு 0.5% உயர்ந்த நிலையில் ஆட்டோ குறியீடு 0.5% சரிந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.
அதானி பவர், ஹிந்துஸ்தான் காப்பர், டாடா மோட்டார்ஸ், கார்டன் ரீச், பிஎஸ்இ லிமிடெட் ஆகியவை நிஃப்டியில் அதிக செயலாக்கத்தில் உள்ள பங்குகளாகும். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் லாபமடைந்து வருகின்றன.
டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.