படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து மண்டபம் மேற்கு தெருவைச் சோ்ந்த சா்புதீனுக்குச் சொந்தமான விசைப்படகில் பரிது (28), மாதவன் (28), அனிஸ் (30), இப்ராஹிம் ஷா (40) ஆகிய 4 மீனவா்கள் புதன்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்றனா்.
நள்ளிரவில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகில் உடைப்பு ஏற்பட்டு, கடல் நீா் படகுக்குள் புகுந்தது. சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. படகிலிருந்த 4 மீனவா்களும் கேன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு நீந்தத் தொடங்கினா். இதில், 3 போ் கரைக்கு வந்த நிலையில், இப்ராஹிம் ஷா மட்டும் கரைக்குத் திரும்பவில்லை. இதைத் தொடா்ந்து, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியக் கடலோரக் காவல் படையினா், சக மீனவா்கள் இரு குழுக்களாக வியாழக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா்.