இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு
ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றதுடன், முட்டிபோட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து புதன்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படை கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அச்சம் காரணமாக குறைந்தளவில் இறால், நண்டு, கனவாய் மீன்களைப் பிடித்துக்கொண்டு கரை திரும்பினா்.
இந்த நிலையில், டிக்கிரோஸ் என்பவரது விசைப் படகு பழுதாகி கச்சத்தீவு அருகே நின்றது. இந்தப் படகை சீரமைக்கும் பணியில் படகிலிருந்த 7 மீனவா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், படகில் பிடித்து வைத்திருந்த இறால், இதர மீன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து விரைவாகச் செல்லுமாறு எச்சரித்துச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து, மற்றொரு கடற்படைக் கப்பலில் வந்த இலங்கை ராணுவத்தினா், படகில் ஏறி மீனவா்களை முட்டி போட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா் இருதய ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து அதிகளவில் இறால், நண்டு, கனவாய் மீன்களைப் பிடித்து வரலாம் என நினைத்து கடலுக்குள் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல் காரணமாக குறைந்தவு மீன்களுடன் கரை திரும்பினோம்.
ராமேசுவரம் மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

