சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!
``படப்பிடிப்பு, வேலை இல்லாவிட்டால்.. வீட்டில் இப்படித்தான் இருப்பேன்'' - ஷாருக்கான் ஓப்பன் டாக்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எப்போதும் மிகவும் பிஸியாகவே இருப்பார். கொரோனா காலத்தில் மட்டும் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் தனது மனைவியின் உழைப்பில் வாழ்ந்ததாக ஷாருக்கான் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது கிங் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அதோடு ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் தனது அணியை உற்சாகப்படுத்தி வருகிறார். ஷாருக்கான் எப்போதும் பிஸியாக இருந்தாலும், வேலை இல்லாத நேரத்தில் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து ஷாருக்கான் தனது நண்பரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் கரண் ஜோகர் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கானிடம் படப்பிடிப்பு அல்லது வேலை இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷாருக்கான், வேலை எதுவும் இல்லையென்றால் நான் எதுவும் செய்வதில்லை. எனக்கு எனது தந்தை இது தொடர்பாக கற்றுக்கொடுத்து இருக்கிறார். எதுவும் செய்யாதவர்கள் எதையாவது சிறப்பாக செய்வார்கள்.
நான் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போது வெறுமனே எதுவுமே செய்யாமல் ஓய்வு எடுப்பேன். எதுவும் செய்யாமல் வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பது எனக்கு பிடிக்கும், அது எனக்கு எந்த வித தொந்தரவையும் ஏற்படுத்தாது. வீட்டை சுத்தம் செய்யும்படி கெளரி சொன்னால் வீட்டை சுத்தம் செய்வேன். எனது மகன் நோட்டு புத்தகத்திற்கு அட்டை போடவோ அல்லது ஐபேடை அப்பேட் செய்யவோ சொன்னால் அதனை செய்வேன்.

இது போன்ற சிறிய சிறிய காரியங்கள் என்னை எனது குடும்பத்துடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது. நாம் அதிகமாக யோசிப்பதையும், எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
வேலை செய்யாதபோது, வீட்டுச் சூழலுக்கு முழுமையாக மாறிவிடுவேன். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது அல்லது எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பது கூட உண்மையிலேயே எனக்கு திருப்தியை கொடுக்கிறது'' என்று தெரிவித்தார்.