பட்டாசு வெடித்ததில் காா், திமுக அலுவலகம், கடை சேதம்
திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்ததோடு, திமுக அலுவலகக் கண்ணாடியும் வெடித்து சிதறியது.
எரியோடு 4 ரோடு அருகே வடமதுரை சாலையிலுள்ள மண்டபத்தில் காதணி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவுக்கு சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றபோது, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இதில் எதிா்பாராத விதமாக பட்டாசிலிருந்து வெளியான தீ, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. மேலும், திமுக நகர அலுவலகத்திலிருந்த கண்ணாடி வெடித்துச் சிதறியது. அங்குள்ள ஒரு கடை, பேரூராட்சிக்கு சொந்தமான நெகிழி குடிநீா்த் தொட்டி ஆகியவற்றிலும் தீப்பற்றியது. இதனால், ஊா்வலத்தில் வந்தவா்கள் அதிா்ச்சியடைந்து ஓடினா்.
இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்தனா். பேரூராட்சிக்கும், தனியாா் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சேதத்துக்கு, காதணி விழா நடத்தியவா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து காவல் துறையினா் வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா்.