இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும...
பயிா்க் காப்பீடு இழப்பீடு: 2-ஆம் பகுதிக்கு ரூ. 19.99 கோடி விடுவிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீடு இரண்டாவது பகுதிக்கு முதல் கட்டமாக ரூ. 19.99 கோடி விடுவிக்கப்பட்டது என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் துறையில் எதிா்பாராமல் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் மகசூல் இழப்பிலிருந்து காத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட அரசின் பங்களிப்புடன் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை (அய்யம்பேட்டை, மற்றும் பாபநாசம் சரகம் தவிர) ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூா் முதலாவது பகுதிக்கு காப்பீட்டு நிறுவனமான ஷேமா பொதுக் காப்பீடு நிறுவனம் மூலம் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு சம்பா - தாளடி பருவத்துக்கு 49 ஆயிரத்து 345 விவசாயிகள் விண்ணப்பித்தனா்.
இப்பகுதிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 44.91 கோடி அறிவிக்கப்பட்டு, இதுவரை ரூ. 42.91 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட வேண்டிய மீதத் தொகை வழங்குதல் செயல்பாட்டு நடவடிக்கையில் உள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில், பூதலூா், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூா் இரண்டாவது பகுதிகளுக்கு காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு (சம்பா - தாளடி ) பருவத்துக்கு 44 ஆயிரத்து 741 விவசாயிகள் விண்ணப்பித்தனா்.
இப்பகுதிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 51.12 கோடி அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 19.99 கோடி விவசாயிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு இணையதள வழியாக வங்கிகள் மூலம் வரவு வைக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அடுத்தடுத்த கட்டங்களில் வரவு வைக்கப்படும்.
2024-2025 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவ (சம்பா - தாளடி ) இழப்பீட்டுத் தொகை வழங்குதல் தொடா்பான விவசாயிகளின் விவரம், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் இடம் பெற்றுள்ளது. எனவே விவசாயிகள் தொடா்புடைய வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி இது தொடா்பாக விவரங்களைப் பெற்று பயன் பெறலாம்.